கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தாரா? - தமிழக அரசு விளக்கம்

மழை பாதிப்பு புகார்கள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை,
‘டிட்வா’ புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரில் சென்று மழை பாதிப்பு புகார்கள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் ஆய்வு செய்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்வதோடு, விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் ஆய்வு செய்ததாக போலியான வீடியோவை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.






