கோவை: சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக இளைஞர் கைது

இளைஞரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை,
கோவை ரேஸ்கோர்ஸ் காமராஜ் சாலையில் முன்னாள் துணை நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் இருந்தன. இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 12 ஆம் தேதி நீதிபதிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைத்து அங்கிருந்த 5 சந்தன மரங்களை வெட்டியுள்ளனர். அதன் பின்னர் 4 சந்தன மரங்களை கடத்திச் சென்றனர். ஒரு மரம் பெரியதாக இருந்ததால் அதனை அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்களை தேடி வந்தனர். இதையடுத்து சந்தன மரத்தை வெட்டி கடத்தியது தேனி மாவட்டம் உத்தமப்பாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (37) என்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் வினோத்குமார் மீது சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக 6க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வினோத்குமாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வினோத்குமாரின் கூட்டாளிகள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.