கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம்: மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது - எடப்பாடி பழனிசாமி

கோப்புப்படம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து பேச வேண்டும். ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் பேசி முதல்வர் சுமுகமான முடிவை எட்ட வேண்டும்.
மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது. திட்ட அறிக்கையை சமர்ப்பித்தபோது 2011 மக்கள் தொகையை திமுக அரசு குறிப்பிட்டது ஏன்? 2025-ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு அனுப்பியிருந்தால் ஒப்புதல் கிடைத்திருக்கும். கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாநில அரசிடம் தான் குளறுபடி உள்ளது. 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மெட்ரோ ரெயில் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொல்லும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது. நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் தமிழக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது. நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் சட்டம் ஒழுங்கு எப்படி சீராகும்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மக்களுக்கு சந்தேகம் உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை அரசு எதிர்ப்பது ஏன்?
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முறையாக நடக்கவில்லை.தாம்பரத்தில் ஒரே கதவு எண்ணில் 360 வாக்காளர்கள் உள்ளனர். போலி வாக்காளர்களை நீக்கக்கோரி மாவட்டந்தோறும் மனு அளித்துள்ளோம். தேர்தல் ஆணையர் மீது டெல்லி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் கூறியுள்ளது. நெல் ஈரப்பத அளவை உயர்த்த வலியுறுத்தியுள்ளோம். திமுக அரசு முறையாக நெல் கொள்முதல் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






