ஜீன் 30க்குள் மகளிர் உரிமை துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
குடும்பத்தில் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) இயங்கி வருகின்றது. அதில் சுழற்சி முறையில் வழக்கு பணியாளர்-1 பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தினர் ஆகிய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றவும், அவர்களின் பாதுகாப்பிற்கான உதவி எண்கள் குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு போன்றவற்றிற்கான விழிப்புணர்வு வழங்கிட செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் தரவு நுழைவு பணியாளர் -1, (Data Entry Operator) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் https://tirunelveli.nic.in/ என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரிக்கு ஜீன் 30-ம் தேதிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.