ஞானசேகரன் குற்றவாளி: ஜூன் 2ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர்.
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.
ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர்.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. அப்போது, ஞானசேகரனுக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஞானசேகரன் சார்பில் ஆஜராக வக்கீல்கள் கோதண்டராமன், ஜெயபிரகாஷ் ஆகியோரை சட்டப்பணி ஆணைக்குழு நியமித்தது.
கடந்த ஏப்ரல் 23-ந்தேதி சாட்சி விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (புதன்கிழமை) வழங்குவதாக நீதிபதி ராஜலட்சுமி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாணவி புகாரளித்து ஐந்து மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார்.
இதன்படி ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி உள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். மேலும் ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டும் என்றும், தண்டனை விவரம் வெளியாகும் வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார். குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஞானசேகரன் கதறி அழுததாக கூறப்படுகிறது.
முன்னதாக இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது ஞானசேகரன் கூறுகையில், "என் அப்பா இறந்துவிட்டார். நிறைய கடன் உள்ளது. அம்மாவையும், சகோதரியையும், மகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். என் வங்கி கணக்கு முடக்கத்தையும் நீக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து, குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், குற்றவாளி ஞானசேகரனுக்கு இரக்கம் காட்டக் கூடாது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகள் உள்ளனவா? என்று சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி ராஜலட்சுமி கேள்வி எழுப்பினார்.
அப்போது, "பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன், அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மகளிர் கோர்ட்டின் தீர்ப்பினைத்தொடர்ந்து ஞானசேகரன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்,