ஆதார் அட்டை குடியுரிமைக்கான ஆவணம் அல்ல- சுப்ரீம் கோர்ட்டு


ஆதார் அட்டை குடியுரிமைக்கான ஆவணம் அல்ல- சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 13 Aug 2025 6:10 AM IST (Updated: 13 Aug 2025 6:22 AM IST)
t-max-icont-min-icon

ஆதார் அட்டை, குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என்ற தேர்தல் கமிஷன் நிலைப்பாடு சரியானதுதான் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்தது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்கள் குடியுரிைமயை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது.இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எம்.பி.க்கள் மனோஜ் ஜா, மகுவா மொய்த்ரா, கே.சி.வேணுகோபால், சுப்ரியா சுலே மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமைக்கான ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளுமாறு கடந்த மாதம் 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரைத்தது. அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம் என்று கடந்த 29-ந்தேதி கூறியது.

இதற்கிடையே, கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டு இருந்தனர்.இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனோஜ் ஜா எம்.பி.யின் வக்கீல் கபில் சிபலை பார்த்து நீதிபதிகள் கூறியதாவது:-பீகாரில் ஒரு கோடி வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்று கூறுகிறீர்கள். ஆனால், மொத்த வாக்காளர்கள் 7 கோடியே 90 லட்சம் பேரில், 7 கோடியே 24 லட்சம்பேர், சிறப்பு திருத்தப்பணியை ஏற்று ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.இதன்மூலம், ஒரு கோடி பேர் நீக்கம், அவர்களின் வாக்குரிமை பறிப்பு என்ற வாதங்கள் நொறுக்கப்பட்டுள்ளன.

7 கோடியே 90 லட்சம் மொத்த வாக்காளர்களில், 6 கோடியே 50 லட்சம் வாக்காளர்களின் பெயர்களோ அல்லது அவர்களின் பெற்றோர் பெயர்களோ, 2003-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலிலேயே இருந்துள்ளன. அதனால் அவர்கள் எந்த ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டாம் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.எனவே, இந்த வாதம் அனைத்தும் நம்பிக்கை குறைவால் ஏற்பட்டதை தவிர வேறில்லை.மேலும், சிறப்பு திருத்தப்பணிக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமைக்கான முடிவான ஆவணங்களாக ஏற்க முடியாது என்றும், கூடுதலாக சில ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் எடுத்த நிலைப்பாடு சரியானதுதான்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மூத்த வக்கீல் கபில் சிபல், .கபில் சிபல், ‘‘ஒரு தொகுதியில், இறந்ததாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்ட 12 பேர் உயிருடன் உள்ளனர்’’ என்று கூறினார்.தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி, ‘‘வரைவு பணியின்போது ஆங்காங்கே சிறு தவறுகள் நடப்பது இயல்புதான். இது வரைவு வாக்காளர் பட்டியல்தான். எனவே, இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டு உயிருடன் இருப்பவர்கள், பிழையை சரிசெய்து கொள்ளலாம்’’ என்று கூறினார். இவ்வழக்கில் இன்றும் (புதன்கிழமை) விசாரணை நடக்கிறது.

1 More update

Next Story