தூத்துக்குடியில் பள்ளி மாணவனை கடத்திய 3 சிறுவர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்த மாணவனை, அவனது தந்தையின் மீதான முன்விரோதத்தில் 3 சிறுவர்கள் பைக்கில் கடத்திச் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகே உள்ள குரங்கணி, காட்டேரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கசாமி மகன் அபினேஷ் (வயது 16). இவர் மாவடிப்பண்ணையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்த அபினேஷை, அவரது தந்தையின் மீதான முன்விரோதத்தில் 3 சிறுவர்கள் பைக்கில் கடத்திச் சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து, அபினேஷின் அண்ணன் முத்துநாராயணனை கைப்பேசியில் அழைத்து, உன் தம்பியை கடத்திச் செல்கிறோம் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் தங்கசாமி புகாரளித்தார். அந்த புகாரின்பேரில், போலீசார் சிறுவர்கள் சென்ற வழியைப் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது கூட்டாம்புளி மெயின் ரோட்டில் அபினேஷை இறக்கிவிட்டு 3 சிறுவர்களும் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் அந்த 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து, தூத்துக்குடி குழந்தைகள் நல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, பாளையங்கோட்டை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






