’சமூக நீதியின் உந்துசக்தி..’ - தேஜஸ்வி யாதவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சென்னை,
பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி. (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) - காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி இருக்கிறது.
இந்த நிலையில், ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;
”தம்பி தேஜஸ்வி யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பீகாரில் புத்துணர்வு பெற்றுள்ள சமூகநீதி இயக்கத்தின் உந்துசக்தியாக எழுந்து, கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையளிப்பவராகத் தாங்கள் இருக்கிறீர்கள். தங்களது தலைமையில் ஒரு புதிய அத்தியாயத்தின் விளிம்பில் பீகார் இருக்கும் நிலையில், சமத்துவம், தரமான கல்வி, வேலைவாய்ப்புகள், மாண்பு என அவர்களது எதிர்பார்ப்புகளைத் தாங்கள் நிறைவு செய்வீர்கள் என நம்புகிறோம். இந்த வரலாற்றுப் பாதையில் தொடர்ந்து வலிமையோடும், நல்ல உடல்நலத்தோடும், துணிச்சலோடும் தாங்கள் தொடர விழைகிறேன்."
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






