சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்

நாட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த கவாய் நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றார். டெல்லி தர்பார அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், டெல்லி துணைநிலை கவர்னர், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மலேசியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பங்கேற்றனர். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் சுமார் 15 மாதங்கள் அதாவது 2027 பிப்ரவரி 9-ந்தேதி வரை பதவியில் இருப்பார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக 2019-ம் ஆண்டு சூர்யகாந்த் பொறுப்பேற்றார். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம், சட்டப்பிரிவு 370 ரத்து, பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வுகளில் நீதிபதி சூர்யகாந்த் இடம் பெற்றிருந்தார்.






