மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்

சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 78) திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 15-ந்தேதி டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்சினை அவருக்கு இருந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் உடல்நிலை சீரானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் 17-ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், காலை 10 மணி அளவில் அவர் அதே ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு டாக்டர்கள் அமிதாப் யாதவ், டாக்டர் நந்தினி ஆகியோர் சிகிச்சை அளிப்பதாக ஆஸ்பத்திரி தலைவர் அஜய் சுவரூப் தெரிவித்தார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கங்காராம் ஆஸ்பத்திரி தலைவர் அஜய் சுவரூப் கூறுகையில், "சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தகுந்த சிகிச்சையை வழங்கினர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும் வெளிநோயாளி என்ற அடிப்படையில் சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.