பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி; விரைவில்... ராஜ்நாத் சிங் வெளியிட்ட தகவல்


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி; விரைவில்... ராஜ்நாத் சிங் வெளியிட்ட தகவல்
x
தினத்தந்தி 29 May 2025 3:00 PM IST (Updated: 29 May 2025 3:46 PM IST)
t-max-icont-min-icon

உள்நாட்டு சாதனங்களின் உதவியால், பயங்கரவாத பதுங்கு குழிகளையும், ராணுவ தளங்களையும் நாம் அழித்தோம் என ராஜ்நாத் சிங் கூறினார்.

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹல்காம் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் சுற்றுலாவாசிகளை கவர கூடிய பல பகுதிகள் உள்ளன. காஷ்மீரில், கோடை காலத்தில் பொழுதுபோக்கு தலங்களில் ஒன்றாக உள்ள பஹல்காமுக்கு கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலாவாசிகள் பலர் குடும்பத்தினருடனும், தம்பதியாகவும் வந்திருந்தனர்.

அப்போது, ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சிலர், அவர்களை இலக்காக கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். அதுவும், ஆண்களாக பார்த்து கொல்லப்பட்டனர். தவிரவும், அவர்களுடைய மதம் என்னவென்று கேட்கப்பட்டு படுகொலை நடத்தப்பட்டது. இதில், இந்துக்களே உயிரிழந்தனர்.

இந்த கொடூர படுகொலையில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். பெண்கள் தனித்து விடப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற முன்னணி அமைப்புக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. அவர்கள் ஒரு சில மணிநேரத்திலேயே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டனர்.

இந்த சூழலில், இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அரசு முடிவு செய்து அதன்படி, அவர்கள் குழுவாக சென்று அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் இன்று நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) வருடாந்திர தொழில் உச்சி மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் உரையாற்றும்போது, நம்முடைய நாட்டின் பாதுகாப்பில் மேக்-இன்-இந்தியா அத்தியாவசியம் வாய்ந்த ஒரு திட்டம் ஆகும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் திறமையான நடவடிக்கையில் அது ஒரு முக்கிய பங்காற்றியது என பேசினார்.

இதேபோன்று, ஏ.எம்.சி.ஏ. திட்டத்தின் செயல்மாதிரி வழியே, உள்நாட்டு பாதுகாப்பு திறனை இன்னும் மேம்படுத்துவது பற்றியும் அவர் குறிப்பிட்டார். இதில் குறிப்பிடும்படியாக, பொது துறை நிறுவனங்களுடன் முதன்முறையாக தனியார் துறையினரும் இணைந்து, ஒரு பெரிய பாதுகாப்பு திட்டப்பணியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள் என அவர் கூறினார்.

இந்த ஏ.எம்.சி.ஏ. செயல்மாதிரியின் வழியே, இந்தியாவில் 5-ம் தலைமுறை போர் விமானங்களை கட்டமைப்பது என்பது ஒரு துணிச்சலான மற்றும் உறுதியான நடவடிக்கையாக அமையும். அது உள்நாட்டு வான்வெளி துறையை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்றும் சிங் பேசியுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் வளம் ஆகியவற்றிற்கு மேக்-இன்-இந்தியா திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறிய சிங், உள்நாட்டு சாதனங்களின் உதவியால், பயங்கரவாத பதுங்கு குழிகளையும், ராணுவ தளங்களையும் நாம் அழித்தோம். நாம் இன்னும் நிறைய செய்திருக்க முடியும். ஆனால், ஒருங்கிணைப்புக்கான சக்தி மற்றும் கட்டுப்பாட்டு ஆகியவற்றிற்கான சிறந்த எடுத்துக்காட்டாக நாம் செயல்பட்டோம் என்று இந்தியாவின் பொறுமையை வெளிப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என தெளிவுப்படுத்திய சிங், நிலப்பகுதி மற்றும் அரசியல் ரீதியாக அந்த மக்கள் பிரிந்திருந்தபோதும், விரைவிலோ அல்லது பின்னரோ, அவர்களாகவே விரும்பி இந்தியாவுக்கு திரும்புவார்கள் என்றும் பேசியுள்ளார்.

அவர்கள், இந்தியாவுடன் ஆழ்ந்ததொரு பிணைப்பை கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரே தவறாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானுடன் இனி பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவை பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெளிவுப்படுத்தினார். பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா, 4-வது பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது.

இந்தியா, இன்றளவில் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை சாதனங்கள் உற்பத்தி மட்டுமின்றி, நவீன கால போர் தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் தயாராகி வருகிறது என்றும் அவர் பேசியுள்ளார்.

10 முதல் 11 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பாதுகாப்பு துறை உற்பத்தி ரூ.43 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால், அது சாதனை அளவாக ரூ.1.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அவற்றில், ரூ.32 ஆயிரம் கோடி தனியார் துறையின் பங்கும் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.700 கோடி என இருந்த ஏற்றுமதி பொருட்கள் இன்று சாதனை அளவாக, ரூ.24 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது என்றும் கூறியுள்ளார்.

1 More update

Next Story