ஒடிசாவில் நீதிக்காக போராடிய மாணவியின் மரணம்.. பாஜகவின் நேரடிக் கொலை - ராகுல் காந்தி கடும் தாக்கு

கோப்புப்படம்
இந்தியாவின் மகள்களுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பாஜக அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை.
தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை துணிச்சலாக பேசினார் அந்த மாணவி. ஆனால் நீதி வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக அவர் அச்சுறுத்தப்பட்டார். துன்புறுத்தப்பட்டார். மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார்.
அவளை பாதுகாக்க வேண்டியவர்களே அவளை சுக்குநூறாக உடைத்தார்கள். ஒவ்வொரு முறையும் போலவே, பாஜக அமைப்பு குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதுகாத்துக்கொண்டே இருந்தது. மேலும் ஒரு அப்பாவி மகளை தீக்குளிக்க கட்டாயப்படுத்தியது.
இது தற்கொலை அல்ல. இது அமைப்பின் திட்டமிட்ட படுகொலை.
மோடி ஜி, ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி... நாட்டின் மகள்கள் எரிந்து, உடைந்து, இறந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அமைதியாகவே இருக்கிறீர்கள்.
நாட்டிற்கு உங்கள் மவுனம் தேவையில்லை. பதில்தான் தேவை. இந்தியாவின் மகள்களுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.