டெல்லி சுனேரி பாக் சாலையில் ராகுல் காந்திக்கு புதிய பங்களா

சுனேரி பாக் பங்களாவில் குடியேர ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்ட 2005-ம் ஆண்டு முதல் டெல்லி 12 துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார். இதனிடையே, அவதூறு வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதனால் 2023 ஆம் ஆண்டு மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து ராகுல் காந்தி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். பின்னர் காந்தி தனது தாயார் சோனியா காந்தியின் ஜன்பத் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார். அவரது தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகும் ராகுல் காந்தி அங்கேயே வசித்து வருகிறார்.
இதனிடையே, ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர் மந்திரிசபை உறுப்பினர் அந்தஸ்தை பெற்றுள்ளார். இதனால் 8-வது வகை பங்களாவை பெறும் உரிமை அவருக்கு உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு, ராகுல் காந்திக்கு பங்களா டெல்லி சுனேரி பாக் சாலையில் உள்ள 5-வது எண் பங்களா வழங்கப்பட்டதாகவும், அவரிடம் இருந்து ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை என்றும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், சுனேரி பாக் பங்களாவில் குடியேர ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ராகுல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது உடைமைகளை சுனேரி பாக் பங்களாவிற்கு மாற்றும் பணி தொடங்கியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டிதான் ராகுல் காந்தி அங்கு வசிக்கத் தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.