3 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்று தாய் தற்கொலை... குடும்ப தகராறில் விபரீதம்


3 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்று தாய் தற்கொலை... குடும்ப தகராறில் விபரீதம்
x

கணவன், மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்தம்மா( வயது 33). இத்தம்பதிக்கு அக்பினா(8), அவனி(6) என்ற 2 மகள்கள், ஆர்யா(4) என்ற மகன் இருந்தனர். இந்தநிலையில் தம்பதி ஆடு மேய்ப்பதற்காக பல்லாரி மாவட்டம் குருகோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பரதனஹள்ளி கிராமத்திற்கு சென்றிருந்தனர்.

அங்கு ராகவேந்திரா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது ஆடுகளை மேய்க்கும் வேலையில் ஈடுபட்டனர். இதற்காக தம்பதி பரதனஹள்ளியில் உள்ள தோட்டத்தில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த சித்தம்மா, தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

பின்னர் அவர் அங்குள்ள பண்ணை குட்டையில் 3 குழந்தைகளையும் வீசி கொன்றுவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த குமார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் குருகோடு போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார், தீயணைப்பு படையினருடன் விரைந்து வந்து பண்ணை குட்டையில் இருந்து சித்தம்மா மற்றும் அவரது 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர்.

பின்னர் அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குருகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப தகராறில் 3 குழந்தைகளை பண்ணை குட்டையில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story