குடிபோதையில் அரசு பஸ்சை ஓட்டி சென்ற வாலிபர்; பயணிகள் அலறல்: வைரலான வீடியோ

அலட்சியத்துடன் செயல்பட்டதற்காக பஸ் டிரைவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பிஜ்னோர்,
உத்தர பிரதேசத்தில் கவுசாம்பியை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கலாகார் பஸ் நிலையத்திற்கு வந்ததும் அந்த பஸ்சை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி சென்று விட்டார். பஸ்சின் சாவி அதில் இருந்துள்ளது.
அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறியுள்ளார். அவர் பஸ்சில் சாவி இருந்தது தெரிந்ததும், பஸ்சை அப்சல்கார் நோக்கி ஓட்டி சென்றார்.
இதனால், பஸ்சில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் அலறினர். இந்த தகவல் அறிந்ததும், சிலர் பஸ்சை தங்களுடைய வாகனங்களில் துரத்தியபடி சென்றனர். சில கிலோ மீட்டர் தொலைவு வரை பஸ்சை அந்த நபர் ஓட்டி சென்றார். இதன்பின்னர், அந்த பஸ் சேற்றில் சிக்கி நின்றது. இதனையடுத்தே பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் பெரிய அளவில் விபத்து எதுவும் ஏற்படவில்லை. எனினும், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. வாகனங்கள் சில சேதமடைந்தன.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அலட்சியத்துடன் செயல்பட்டதற்காக பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர். வாலிபரை காவலுக்கு அழைத்து சென்றனர். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது என கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு (கிழக்கு) அமித் கிஷோர் ஸ்ரீவஸ்தவா கூறினார்.