பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ. 7 கோடி கொள்ளை - பெங்களூருவில் துணிகரம்

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ரு. 7 கோடியை கொள்ளையடித்து சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஜேபி நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்ப ரூ. 7 கோடி காரில் கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தில் டிரைவர், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் சென்றனர்.
அசோக்பில்லர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அந்த வாகனத்தை காரில் வந்த கும்பல் இடைமறித்தது. தாங்கள் மத்திய அரசின் வருமானவரித்துறை அதிகாரிகள் என கூறிய அந்த கும்பல் வாகனத்தில் கொண்டு செல்லப்படும் பணத்திற்கான ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதையடுத்து, பணத்தை கொண்டு சென்ற வாகனத்தை அந்த கும்பல் கடத்தியுள்ளது. வாகனத்தில் இருந்த ரூ. 7 கோடி ரூபாய் பணத்தை அந்த கும்பல் எடுத்துக்கொண்டு அதில் பயணித்த காவலாளி, டிரைவரை அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளது.
பணம் கொள்ளையடிக்கப்பட்டதை உணர்ந்த ஏடிஎம் வாகன காவலாளி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ரு. 7 கோடியை கொள்ளையடித்து சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ. 7 கோடி கொளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.






