கள்ளக்காதலியை குத்திக்கொன்று இளைஞர் தற்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் மலுமு மாவட்டம் சஹலிம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஜோதி குமாரி (வயது 24). இவருக்கும் திருமணமாகி கணவர் உள்ள நிலையில் ஹர்வா மாவட்டம் சிமர்டண்ட் கிராமத்தை சேர்ந்தவர் சுமித் குமாருடன் (வயது 26) ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த கள்ளக்காதல் குறித்து ஜோதியின் கணவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும், இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர்.
இதனிடையே, சுமித் குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனால், சுமித்திற்கும் அவரது கள்ளக்காதலி ஜோதிக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது.
இந்நிலையில், சுமித் இன்று தனது கள்ளக்காதலி ஜோதியுடன் பன்பூர்வா கிராமத்தில் உள்ள ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சுமித் தான் மறைத்து கொண்டுவந்த கத்தியால் ஜோதியை சரமாரியாக குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு சுமித்தும் தற்கொலை செய்துகொண்டார்.
ஆள்நடமாட்டமற்ற பகுதியில் 2 சடலங்கள் கிடப்பது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து என்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.