காதலனின் பாலியல் தொல்லையால் கன்னட நடிகையின் உறவுக்கார பெண் தற்கொலை

மயங்க், அச்சலுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பெங்களூரு,
பிரபல கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத். இவரது தாய்மாமாவின் மகள் அச்சல் (வயது 22). ஹாசனை சேர்ந்த இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலைக்காக பெங்களூரு பாண்டுரங்க நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்தநிலையில் அச்சலும் அவரது தூரத்து உறவினரான மயங்க் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
மயங்க் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். அவர் திருமணத்துக்கு முன்பே உல்லாசத்துக்கு வரும்படி அச்சலை அழைத்துள்ளார். மேலும் மயங்க், அச்சலுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மயங்கின் பாலியல் அத்துமீறல் அதிகமானதால், அச்சல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். ஆனாலும் மயங்க் விடாமல் செல்போனில் தொடர்புகொண்டு அச்சலுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதற்கிடையே மயங்க் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது அச்சலுக்கு தெரியவந்தது. இதனால் மேலும் மனமுடைந்த அச்சல், மயங்கிற்கு செல்போனில் தற்கொலை செய்துகொள்வதாக குறுந்தகவல் அனுப்பி உள்ளார். பின்னர் அவர், பெங்களூருவில் தனது உறவினர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்றிருந்த உறவினர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, அச்சல் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் புட்டேனஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அச்சலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அச்சலின் பெற்றோர் தங்கள் மகள் சாவுக்கு மயங்க் மற்றும் அவரது தாய் மைனா தான் காரணம் என புட்டேனஹள்ளி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






