புதின் வருகை..மரபை மாற்றிய மத்திய அரசு; ராகுல் காந்தி சாடல்

பொதுவாக இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ரஷிய அதிபர் புதின் 2 நாள் பயணமாக இன்று மாலை 5 மணி அளவில் இந்தியா வருகிறார். இந்த பயணத்தின்போது, அவர் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்த நிலையில், அதிபர் புதினை சந்திக்க எதிர்க்கட்சி தலைவரான தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது:-
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்களும் சந்தித்து பேசுவது மரபாக இருந்து வந்தது. முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய் ஜி, மன்மோகன்சிங் ஆட்சி காலங்களிலும் இந்த மரபு கடைபிடிக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும்போதும் அல்லது நான் வெளிநாடு செல்லும்போதும், எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. நாமும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இது வெறும் அரசு மட்டும் இல்லை.
இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை, பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சகமும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து விலக்கியே வைத்துள்ளது. போதிய பாதுகாப்பின்மையால் இதுபோன்று செய்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டிருப்பதை இந்த அரசு விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






