விமானங்கள் ரத்தால் டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுக்கும் இண்டிகோ நிறுவனம்

மீட்பு செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 5 நாட்களாக இது தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு விமானங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பயணத்தடை ஏற்பட்டு அவதிப்பட்டனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது.
இந்தநிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. விமானங்கள் ரத்து படிப்படியாக சரியாகும் என தெரிகிறது. ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணத்தை பயணிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்குள் இண்டிகோ நிறுவனம் திரும்ப செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், விமானங்கள் ரத்தால் டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திருப்பி வழங்கி வருகிறது. இதுவரை ரூ.610 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீட்பு செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், முழுமையான செயல்பாட்டு இயல்புநிலையை விரைவில் மீட்டெடுப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
500 கி.மீ. தூரம் வரையிலான பயணத்துக்கு அதிகபட்சமாக ரூ.7500-ம், 500 முதல் 1000 கி.மீ. வரை அதிகபட்சம் ரூ.12 ஆயிரமும், 1000 முதல் 1500 கி.மீ. வரை அதிகபட்சம் ரூ.15 ஆயிரமும், 1500 கி.மீ.-க்கு மேல் அதிகபட்சமாக ரூ.18 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உச்சவரம்பு வணிக வகுப்பு மற்றும் உதான் விமானங்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






