உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் புதிய உச்சம் தொட்ட இந்தியா: மத்திய மந்திரி பெருமிதம்


உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் புதிய உச்சம் தொட்ட இந்தியா:  மத்திய மந்திரி பெருமிதம்
x

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான சூழலை தொடர்ந்து உருவாக்குவதில் அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலை லண்டனை அடிப்படையாக கொண்ட குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ் என்ற உலகளாவிய உயர் கல்வி ஆய்வு நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

கல்வி தரம், ஆசிரியர்-மாணவர் விகிதம், ஆராய்ச்சிகள், சர்வதேச மாணவர்களின் பன்முகத்தன்மை மற்றும் படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு திறன் சார்ந்த காரணிகளை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகங்கள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்படுகின்றன.

இதன்படி, 2026-ம் ஆண்டுக்கான கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், டெல்லி ஐ.ஐ.டி. 123-வது இடத்திற்கு முன்னேறி, இந்தியாவின் சிறந்த கல்வி மையம் என பெயர் பெற்றுள்ளது. 2 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளது.

இதுதவிர, பல புதிய உச்சங்களை இந்தியா தொட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் 54 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில், நடப்பு ஆண்டில் புதிதாக இந்தியாவின் 8 கல்வி மையங்கள் சேர்ந்துள்ளன. இதனால், 54 பல்கலைக்கழகங்களுடன், உலக அளவில் 4-வது சிறந்த பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக இந்தியா உள்ளது.

அமெரிக்கா (192 ), இங்கிலாந்து (90 ) மற்றும் சீனா (72 ) ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. நடப்பு ஆண்டில் இந்தியாவை தவிர்த்து வேறு எந்த நாடும் இந்தளவுக்கு, தரவரிசை பட்டியலில், அதிக எண்ணிக்கையிலான கல்வி மையங்கள் புதிதாக இடம் பெற்றுள்ளன என்ற பெருமையை பெறவில்லை.

எனினும், இந்தியாவுக்கு அடுத்து ஜோர்டான் மற்றும் அஜர்பைஜான் நாடுகளின் தலா 6 கல்வி மையங்கள், 2026 தரவரிசை பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளன.

இதுபற்றி பெருமிதம் தெரிவித்த மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், 2014-ம் ஆண்டில் 11 பல்கலைக்கழகங்கள் என்ற அளவில் இருந்து சமீபத்திய தரவரிசை பட்டியலில் 54 பல்கலைக்கழகங்கள் என்றளவுக்கு முன்னேறி உள்ளது.

இதுபோன்று, 5 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது, பிரதமர் மோடி அரசின் கல்வி சீர்திருத்தத்தில் ஏற்படுத்திய மாற்று அணுகுமுறைக்கான சான்றாகும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

அவர் தொடர்ந்து, புதிய கல்வி கொள்கை 2020, நம்முடைய கல்வியமைப்பை மாற்றியது மட்டுமல்லாமல், ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது என்றும் பகிர்ந்து உள்ளார். ஜி20 நாடுகளில், விரைவாக வளர்ந்து வரும் கல்வி நடைமுறையை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்பது ஆழ்ந்த பெருமைக்குரிய விசயம் ஆகும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு மற்றும் சர்வதேசமயம் ஆக்குதல் ஆகியவற்றில் புதிய கல்வி கொள்கையின் உந்துதலால், வருங்காலத்தில் இன்னும் பல இந்திய பல்கலைக்கழகங்கள் உலகளவில் சிறந்து விளங்கும் என்றும் அவர் பதிவிட்டு உள்ளார்.

இதேபோன்று, பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், நம்முடைய கல்வி துறையில், இந்த 2026-ம் ஆண்டுக்கான கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் ஆனது சிறந்த செய்தியை கொண்டு வந்துள்ளது. இந்திய இளைஞர்களின் நலனுக்காக ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான சூழலை தொடர்ந்து உருவாக்குவதில் நம்முடைய அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படும் என்று தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story