‘உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இல்லை, அமைதியின் பக்கம் இருக்கிறது’ - பிரதமர் மோடி


‘உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இல்லை, அமைதியின் பக்கம் இருக்கிறது’ - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 5 Dec 2025 2:43 PM IST (Updated: 5 Dec 2025 2:51 PM IST)
t-max-icont-min-icon

அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம் என புதினிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லிக்கு வந்த புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் இல்லத்தில் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். இரவு விருந்துக்குப்பின் புதினுக்கு பகவத் கீதையை பிரதமர் மோடி பரிசளித்தார். சமீப காலமாக இந்தியா-அமெரிக்கா உறவுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ள சூழலில், ரஷிய அதிபரின் இந்திய வருகை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் இந்தியா, ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல், இந்தியா-ரஷியா வர்த்தகத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து பாதுகாப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று நடைபெறும் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “உக்ரைன் மோதல் தொடங்கியதில் இருந்து ரஷியாவுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். ஒரு நெருங்கிய நண்பராக, அங்குள்ள நிலைமை குறித்து ரஷியா தொடர்ந்து எங்களுக்கு தெரிவித்து வருகிறது. நம்பிக்கை ஒரு பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன்.

நாம் அனைவரும் அமைதிக்கான பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும். போர் நிறுத்தத்திற்கான சமீபத்திய முயற்சிகள் குறித்து நான் அறிவேன். உலகம் அமைதியை நோக்கித் திரும்பும் என்று நான் நம்புகிறேன். உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இல்லை என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். இந்தியாவுக்கு ஒரு பக்கம் இருக்கிறது, அது அமைதியின் பக்கம். அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று தெரிவித்தார். தொடர்ந்து புதின் பேசுகையில், அமைதியான தீர்வை நோக்கி ரஷியா செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

1 More update

Next Story