வரதட்சணை கொடுமை: ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தடிப்பல்லி பகுதியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சின்னராமுடு. இவரது மகள் மதுரி சஹிதிபாய் (வயது 27).
இதனிடையே, மதுரி சஹிதிபாய் நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரை காதலித்து கடந்த மார்ச் மாதம் பதிவுத்திருமணம் செய்துகொண்டார். அதேவேளை, திருமணமான சில மாதங்களில் மதுரியிடம் வரதட்சணை கேட்டு ராஜேஷ் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் மதுரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்நிலையில், கணவன் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்ததாலும், கணவன் தன்னை உண்மையாக காதலிக்கவில்லை என்றும், தன்னை மீண்டும் அழைத்து செல்ல வரவில்லை என்று மன வேதனையடைந்த மதுரி இன்று தனது பெற்றோர் வீட்டில் உள்ள கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மதுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






