திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இளம்பெண்ணை அடித்துக் கொன்ற மாப்பிள்ளை - குஜராத்தில் பரபரப்பு


திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இளம்பெண்ணை அடித்துக் கொன்ற மாப்பிள்ளை - குஜராத்தில் பரபரப்பு
x

இரும்பு கம்பியால் மணமகள் சோனியின் தலையில் சாஜன் பலமாக தாக்கியுள்ளார்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும், சோனி ஹிம்மத் ரத்தோட் என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழூவீச்சில் நடைபெற்று வந்தன. திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு மாப்பிள்ளைக்கும், மணமகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக மாப்பிள்ளை சாஜனும், மணமகள் சோனியும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நன்கு பழக்கமானவர்கள். இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று திருமண சேலை மற்றும், பணம் சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த சாஜன், இரும்பு கம்பியை எடுத்து மணமகள் சோனியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். மேலும் சோனியின் தலையை சுவற்றில் வேகமாக மோதியுள்ளார். இதில் படுகாயமடைந்த இளம்பெண் சோனி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சோனியை கொலை செய்துவிட்டு சாஜன் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சோனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சாஜன் பரய்யாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருமண தினத்தன்று மணமகளை மாப்பிள்ளை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story