ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதி.. பிடித்து இழுத்த போலீஸ் - அடுத்து நடந்த கொடூரம்


ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதி.. பிடித்து இழுத்த போலீஸ் - அடுத்து நடந்த கொடூரம்
x
தினத்தந்தி 27 May 2025 11:20 AM IST (Updated: 27 May 2025 12:16 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை நாய் கடித்தநிலையில், சிகிச்சை பெற அவசரமாக சென்றபோது அந்த தம்பதியினரை போலீசார் பிடித்து இழுத்தனர்.

மண்டியா,

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கோரவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியின் மகள் ஹிருதிக்ஷா (வயது 4). இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஹிருதிக்ஷாவை நாய் கடித்ததாக தெரிகிறது.

இதனால் பலத்த காயம் அடைந்த அவளை சிகிச்சைக்காக அசோக்கும், வாணியும் மோட்டார் சைக்கிளில் மண்டியாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மண்டியா நகர் நந்தா சர்க்கிளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

அந்த சமயத்தில் அசோக்கும், வாணியும் ஹெல்மெட் அணியாமல் மகள் ஹிருதிக்ஷாவுடன் அந்த வழியாக வந்துள்ளனர். அப்போது அவர்கள் ஹெல்மெட் அணியாததை கவனித்த போக்குவரத்து போலீசார், மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அப்போது மகளுக்கு நாய் கடித்துள்ளதாகவும், சிகிச்சைக்காக அவசரமாக செல்ல வேண்டும் என்றும் கூறி அசோக் அங்கிருந்து செல்ல முயன்றார்.

ஆனால் போக்குவரத்து போலீசார் அவர்களை செல்ல விடாமல் மோட்டார் சைக்கிளை இழுத்ததாக தெரிகிறது. இதனால் அசோக்கின் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் சாலையில் தவறி விழுந்தனர். இந்த விபத்தில் குழந்தை ஹிருதிக்ஷா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அசோக்கும், வாணியும் காயமின்றி உயிர் தப்பினர்.

தாங்கள் பெற்ற மகள், கண்முன்னே துடிதுடித்து உயிரிழப்பதை கண்டு அசோக்கும், வாணியும் கதறி அழுதனர். மேலும் உயிரிழந்த ஹிருதிக்ஷாவின் உடலை மடியில் வைத்து கொண்டு சாலையில் அமர்ந்து கணவன்-மனைவி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் போலீசாரின் அலட்சியத்தால் தான் தங்கள் மகள் உயிரிழந்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதது, கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

இதனை அறிந்து அந்தப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர். மேலும் குழந்தையின் பெற்றோருக்கு ஆதரவாகவும், போலீசாருக்கு எதிராகவும் மக்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்டியா போலீஸ் சூப்பிரண்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் அவர், போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தையின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராம், நாகராஜ், குருதேவ் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே விபத்தில் மகளை பறிகொடுத்த அசோக், செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது மகள் ஹிருதிக்ஷாவை நாய் கடித்ததால் சிகிச்சைக்காக மத்தூரில் இருந்து சிகிச்சைக்காக மண்டியாவுக்கு அழைத்து வந்தேன். அப்போது நானும் எனது மனைவியும் ஹெல்மெட் அணியாததால், மோட்டார் சைக்கிளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது நான் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு செல்ல இருப்பதால் விட்டுவிடும்படி கூறிவிட்டு செல்ல முயன்றேன். அப்போது போலீசார் மோட்டார் சைக்கிளை பிடித்து இழுத்தனர். இதனால் மோட்டார் சைக்கிள் சாலையில் உருண்டு விபத்துக்குள்ளாகி எனது கண்எதிரே மகளை பறிகொடுத்து விட்டேன். எனது மகள் உயிர் போனதற்கு போலீசார் தான் காரணம். மகளை இழந்த எனக்கு இழப்பீடு வழங்குவதாக கூறுகிறார்கள். இழப்பீடு எனக்கு வேண்டாம். நான் ரூ.10 லட்சம் கொடுக்கிறேன் எனது மகளை திரும்ப கொடுத்து விடுங்கள்" என கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

இது அங்கிருந்த அனைவரின் கண்களையும் குளமாக்கியது.

1 More update

Next Story