குறைவான மைலேஜ் கொடுத்ததால் விரக்தி: ஷோரூம் வாசலில் மின்சார ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய நபர்

ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என்று ஷோரூம் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் சோலங்கி. இவர் கடந்த ஆண்டு ரூ. 5 லட்சத்திற்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை (இ-ஆட்டோ) வாங்கியுள்ளார். இதற்கான முன்பணமாக ரூ. 70 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும், மாத இ.எம்.ஐ. தொகையாக ரூ. 10,655 செலுத்தி வந்தார். மின்சார ஆட்டோவை ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என்று ஷோரூம் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதை நம்பி மோகன் ஆட்டோவை வாங்கியுள்ளார்.
தொடக்கத்தில் ஆட்டோ ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 174 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைத்துள்ளது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 70 - 74 கிலோ மீட்டர் வரை மட்டுமே மைலேஜ் கொடுத்துள்ளது. இது குறித்து ஷோரூமில் மோகன் புகார் அளித்துள்ளார். ஆனால், ஷோரூம் ஊழியர்கள் ஆட்டோ குறைவான மைலேஜ் கொடுப்பதற்கான காரணம் குறித்து மோகனிடம் கூறவில்லை. மேலும், ஆட்டோவில் ஏற்பட்ட பிரச்சினையும் சரிசெய்யவில்லை.
இந்நிலையில், ஷோரூம் ஊழியர்களின் செயல்பாடு, ஆட்டோ மைலேஜ் குறைவாக கொடுத்ததால் ஆத்திரமடைந்த மோகன் இன்று மின்சார ஆட்டோ வாங்கிய ஷோரூமிற்கு சென்றுள்ளார். ஷோரூம் வாசலில் ஆட்டோவை நிறுத்திய மோகன், தான் கொண்டு வந்த பெட்ரோலை ஆட்டோவில் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் ஆட்டோ தீயில் எரிந்து நாசமானது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் இது குறித்து மோகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






