டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் 24ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் முதல்-அமைச்சருக்கு, மேள தாளங்களுடன் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி,ஜெகத்ரட்சகன், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, உள்ளிட்டோர் சால்வை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.
டெல்லியில் முக்கிய பிரமுகர்களை ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்படி ஸ்டாலின் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டம் முடிந்து, அன்றே சென்னை திரும்புகிறார்.
இன்று இரவு அல்லது நாளை பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.