நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்: செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு

இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
அப்போது அவர் பேசும்போது, இந்த குளிர்கால கூட்டத்தொடர் வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. பீகார் சட்டசபை தேர்தலில் பெண்களின் வாக்குப்பதிவு அதிகரித்து உள்ளது. கூடுதல் வாக்குப்பதிவு என்பது ஜனநாயகம் வலுப்பெறுவதற்கான அடையாளம்.
ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை சிலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. பீகார் தேர்தல் தோல்வியை மனதில் வைத்து கொண்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட கூடாது. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார்.
அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார். நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமுக முறையில் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த விஷயம் பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யலாம். இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடாக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.






