84 ஆயிரம் புதிய 4ஜி மொபைல் டவர்கள்; பயனாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி டவர்கள் விரைவில், 5ஜி சேவைகளை வழங்கும் வகையில் அவற்றின் தரம் மேம்படுத்தப்படும்.
புதுடெல்லி,
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தன்னுடைய மொபைல் போன் பயன்பாட்டாளர்களின் நெட்வொர்க் சிக்கல்களை களையும் நோக்கில் மிக பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசு சார்ந்த இந்த தொலைதொடர்பு நிறுவனம் நாடு முழுவதும் 84 ஆயிரம் புதிய 4ஜி மொபைல் டவர்களை நிறுவியுள்ளது.
உள்நாட்டு தொழில் நுட்பத்தின் உதவியுடன் 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவும் நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த டவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதனால், கிராமப்புற, நகர்ப்புற என மொத்தம் 9 கோடிக்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல். பயனாளர்கள் பயன் பெறுவார்கள். இந்த இலக்குடன் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்ததும், 4ஜி டவர்கள் விரைவில், 5ஜி சேவைகளை வழங்கும் வகையில் அவற்றின் தரம் மேம்படுத்தப்படும்.
அந்த வகையில், இதுவரை 83.99 சதவீத திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி, 84 ஆயிரம் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த 4ஜி டவர்களை முழுமையாக நிறுவும் பணிகள் முடிவடைந்ததும், விரைவில், 5ஜி சேவைகளை தொடங்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இது ஜூன் மாதத்தில் இருந்து சாத்தியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பல்வேறு நகரங்களில் 5ஜி சேவைகளை வழங்கி வரும் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் போட்டியிடுவதற்கான முக்கிய நடவடிக்கையாக அமையும். தன்னுடைய நீண்டகால பயனாளர்களுக்கு மேம்பட்ட சேவை மற்றும் சிறந்த மதிப்பளிக்கும் வகையில் தொலைத்தொடர்பு சந்தையில் மீண்டும் தனக்கென ஒரு நிலையை பெற்றிட பி.எஸ்.என்.எல். நிறுவனம் முயன்று வருகிறது.