நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது

லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை புதிய வடிவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொள்ள சதி திட்டமிட்டு உள்ளன.
ஆமதாபாத்,
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதில் சந்தேகத்திற்குரிய வகையிலான 3 பேர் அதலாஜ் சுங்க சாவடி அருகே கைது செய்யப்பட்டனர். அவர்கள் அகமது மொஹியுதீன், ஆசாத் சுலேமான் ஷேக் மற்றும் முகமது சுஹேல் சலீம் கான் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து 2 கிளாக் ரக கைத்துப்பாக்கிகள், பெரட்டா ரக கைத்துப்பாக்கி ஒன்று, 30 தோட்டாக்கள் மற்றும் 4 லிட்டர் ஆமணக்கு எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் 3 பேரும் ஆயுத விநியோகம் செய்தபோது பிடிபட்டு உள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடந்த ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பயங்கரவாத இலக்குகள் தகர்த்து அழிக்கப்பட்டன. அது நடந்து 6 மாதங்களுக்கு பின்னர், புதிய வடிவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொள்ள லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை சதி திட்டமிட்டு உள்ள அதிர்ச்சிக்குரிய தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தன.
இதுதொடர்பான உளவு தகவலின்படி, பயங்கரவாத குழுக்களின் ஊடுருவல், எல்லை கடந்து ஆயுத தளவாடங்களை கடத்தி கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் வழியேயான இந்த ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் சிறப்பு சேவை குழு உதவியுள்ளது. அதன் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் கூட ஆதரவளித்து உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
இதுதவிர, இந்திய பகுதிகளை பயங்கரவாதி ஷாம்ஷெர் தலைமையிலான லஷ்கர்-இ-தொய்பா குழு, டிரோன்கள் உதவியுடன் வான்வழியே ஆய்வு செய்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், தாக்குதலுக்கு சாத்தியப்பட்ட இடைவெளி பகுதிகளை அடையாளம் காணுதலும் நடந்துள்ளன. இதனால், வருகிற வாரங்களில் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன என 4 நாட்களுக்கு முன் உளவு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சூழலில், நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.






