ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து - திணறும் இண்டிகோ

புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டது.
டெல்லி,
விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை புதிய விதிகளை வகுத்தது. அதன்படி, ஒரு விமானி தொடர்ச்சியாக 18 மணி நேரம் பறக்கலாம் என்ற விதி 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது. வாரத்திற்கு 48 மணி நேரம் கட்டாயம் விடுமுறை வழங்கப்பட வேண்டும் உள்பட பல்வேறு புதிய விதிகள் விதிக்கப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றாத விமான நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஏர் இந்தியா, ஆகாசா, ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்கள் இந்த காலத்தை பயன்படுத்தி கூடுதல் விமானிகள், பணியாளர்களை நியமித்தன. ஆனால், இண்டிகோ நிறுவனம் கால அவகாசம் வழங்கியும் கூடுதல் ஆட்களை நியமிக்கவில்லை. புதிய விதிகளை அமல்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டும் அதை இண்டிகோ நிறுவனம் பயன்படுத்தாமல் குறைவான விமானிகள், பணியாளர்களுடன் சேவையை தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்தது. போதிய விமானிகள் இல்லாத காரணத்தால் இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவை பல ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்த பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் கடும் அவதியடைந்தனர்.
டிசம்பர் 10 முதல் 15ம் தேதிக்குள் விமான சேவை மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் என்று இண்டிகோ செயல் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இண்டிகோ விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை விசாரணை தொடங்கியுள்ளது. அதேவேளை, விமான சேவை வரும் திங்கட்கிழமைக்குள் இயல்பு நிலைக்கு திரும்பும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.






