தொழில்நுட்ப பணிகள் தேர்வு: 33.2 சதவீதம் பேர் எழுதவில்லை; டி.என்.பி.எஸ்.சி. தகவல்

25 ஆயிரத்து 558 பேர் தேர்வு எழுத வரவில்லை.
சென்னை,
டிப்ளமோ, ஐ.டி.ஐ. கல்வித் தகுதி உடைய 58 விதமான பதவிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் வரும் 1,910 காலியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கு 76 ஆயிரத்து 974 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான தாள்-1 தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ் தகுதித்தாள் தேர்வு, பொதுப்பாடங்கள் மற்றும் திறனறிவுத் தேர்வாக நடந்தது. 38 மாவட்டங்களில் 248 அறைகளில் தேர்வு நடந்து முடிந்தது. சென்னையில் மட்டும் 21 அறைகளில் நடைபெற்றது.
இந்த தேர்வை 51 ஆயிரத்து 416 பேர் மட்டுமே எழுதினார்கள். 25 ஆயிரத்து 558 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 33.2 சதவீதம் பேர் எழுதவில்லை. இதனைத் தொடர்ந்து தாள்-2 தேர்வு (தொழில்நுட்பப்பாடங்கள்) வருகிற 7-ந்தேதி மற்றும் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.