குரூப் 1 தேர்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர்

மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்றது.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 70 காலியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது.
இந்த பதவிகளுக்கு 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேர், குரூப்-1 ஏ பதவிக்கு 6 ஆயிரத்து 465 பேர், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிக்கு 14 ஆயிரத்து 849 பேர் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான முதல் நிலை தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும், கூடுதலாக 6 தாலுகாக்களிலும் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற்றது.
குரூப் 1 தேர்வை நடைபெறுவதை, டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர், சென்னை எழும்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்கே பிரபாகர் கூறியதாவது: நடப்பு ஆண்டு தேர்வர்கள் எளிய முறையில் விடையளிக்கும் வகையில், தேர்வு தாள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.