ஆசிரியர் தகுதித்தேர்வு ‘ஹால்டிக்கெட்' எடுப்பதில் சிரமம்- தேர்வர்கள் குற்றச்சாட்டு

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தாள்-1 தேர்வு வருகிற 15-ந் தேதியும், தாள்-2 தேர்வு 16-ந் தேதியும் நடக்க இருக்கிறது.
சென்னை,
பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. செப்டம்பர் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 தேர்வு வருகிற 15-ந் தேதியும் (நாளை மறுதினம்), தாள்-2 தேர்வு 16-ந் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை தேர்வை நடத்தக்கூடிய ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அப்படி ஒரு தேர்வர் ஹால்டிக்கெட்டை பதிவிறக்க கடவுச்சொல்லை மறந்துவிட்டதால், அதனை மாற்றி ஹால்டிக்கெட்டை பதிவிறக்க செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. அனுப்ப முயற்சித்தும், அந்த ‘மெசேஜ்' வந்து சேராததால், அவர் ஹால்டிக்கெட் எடுக்கமுடியாமல் திணறுகிறார். இதுபற்றி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் அவர் புகாராக அனுப்பியுள்ளார்.






