புயல் எதிரொலி: பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை கண்டிப்புடன் தெரிவித்து இருக்கிறது.
சென்னை,
‘டித்வா' புயல் டெல்டா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி நல்ல மழையை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கனமழை பெய்யக் கூடிய மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை முடிவு செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பள்ளிக்கல்வியாண்டு நாட்காட்டியில் 29-ந்தேதி (சனிக்கிழமை) விடுமுறை என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் பள்ளிகளுக்கு அன்றையதினம் விடுமுறைதான்' என்று தெரிவித்தனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். மேலும் மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும், சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அதுபோல எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித் துறை கண்டிப்புடன் தெரிவித்து இருக்கிறது.






