டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி; இந்திய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி


டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி; இந்திய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி
x

இந்திய மருந்து பொருட்களுக்கான வரி விதிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் குறியீடு பெரும் சரிவை கண்டது. அது, தொடக்கத்தில் 786.36 புள்ளிகள் சரிந்து 80,695.50 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 212.80 புள்ளிகள் சரிந்து 24,642.25 புள்ளிகளாக இருந்தது. காலை 11 மணியளவில், பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவிலேயே இருந்தன.

இந்நிலையில், இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 5.96 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளது. இது ரூ.2,768 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, மொத்த வருவாய் 5 சதவீதம் உயர்ந்து ரூ.16,715 கோடியாக உள்ளது.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதம் உயர்ந்து, ரூ.2,484.90 ஆக உள்ளது. இது வலுவான லாப நோக்கில் காணப்படுகிறது.

எனினும், நிப்டியில் மருந்து பொருள் நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. இதன்படி, இப்கா லேப்ஸ், லுபின் மற்றும் ஜைடஸ் லைப் ஆகியவை 2 முதல் 3 சதவீத சரிவை சந்தித்துள்ளன. சிப்லா மற்றும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனங்களின் பங்குகள் முறையே 1.16 மற்றும் 1.48 சதவீத சரிவை கண்டுள்ளன. இவை இரண்டும் நிப்டி 50 நிறுவனங்களில் ஒன்றாக இருந்தபோதும், சரிவையே சந்தித்துள்ளன.

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு மற்றும் கூடுதல் அபராதம் ஆகியவற்றை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். அது ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது. அவர், மருந்து பொருட்களுக்கான வரி விதிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

இதனால், இந்திய பங்கு சந்தைகளில் அது பெரிய அளவில் எதிரொலித்தது. இது வர்த்தக நம்பிக்கையை பெருமளவில் குலைக்கும் என்பதுடன், பொருளாதார மந்தநிலையையும் ஏற்படுத்த கூடும்.

1 More update

Next Story