தங்கம் விலை தொடர்ந்து உயர்வு...இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயரத்தொடங்கியிருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் (மே) 27-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 995-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை தொடர்ந்து சரிந்தது. கடந்த 30-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 895-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 360-க்கும் விற்பனையானது.
அதன்தொடர்ச்சியாக, 3 நாட்கள் தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.30-ம் ஒரு சவரன் ரூ.240- உயர்ந்து முறையே கிராம் ரூ.8 ஆயிரத்து 950-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழலில், திடீரென நேற்று மாலையிலும் தங்கம் விலை 2-வது முறையாக மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று காலை நேர நிலவரத்தை காட்டிலும் கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் உயர்ந்தது. அந்த வகையில், ஒரே நாளில், ஒரு கிராம் தங்கம் ரூ.140-ம் ஒரு பவுன் ரூ.1,120-ம் உயர்ந்து, கிராம் ரூ.9 ஆயிரத்து 60-க்கும், பவுன் ரூ.72 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை இன்றும் பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.72,640-ஆகவும், ஒரு கிராம் ரூ.9,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை பிரியர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது.கடந்த 20 நாட்களுக்கு பிறகு, அதாவது மே மாதம் 11-ந்தேதிக்கு பிறகு, தங்கம் விலை பவுன் மீண்டும் ரூ.72 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.