நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி

வெளிநாடுகளுக்கு தினசரி சுமார் 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 7 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி 5 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினசரி சுமார் 60 லட்சம் முட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன.
வெளிநாடுகளுக்கு தினசரி சுமார் 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
பண்ணை கொள்முதல் முட்டை விலையை தினசரி தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. முக்கிய திருவிழா காலங்களில் முட்டை நுகர்வு குறைவதால், விற்பனை குறைந்து முட்டை விலை சரிவடைகிறது. எனவே முட்டைக்கு நிரந்தர விற்பனை மையம் இருந்தால் தான், முட்டை விலை சரிவை தடுக்க முடியும் என்பதால், கோழிப்பண்ணையாளர்கள் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுதிமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்முறையாக நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தலா 4.75 லட்சம் வீதம் 20 குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்னர்களில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் முட்டைகள் அமெரிக்கா சென்றடையும். அதன் பின்னர் தொடர்ந்து முட்டை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அமெரிக்கா அனுமதி அளித்த நிலையில் முதற்கட்டமாக 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி தொடங்கி உள்ளதால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனை மேம்படும் என்றும் விலை வீழ்ச்சியடைவது தடுக்கப்படும் என்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள் கூறினர்.