தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியம்... ஆனால் ஒரு கண்டிஷன்..!

ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் எண்ணெய் தேய்ப்பது, உலர்ந்த காய்ந்துபோன தலைமுடிக்கு மிகவும் நல்லது.
தலையில் எண்ணெய் தேய்க்காமல் விட்டால் தலைமுடி மிகவும் வறட்சியாகி பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, முடியின் வேர்க்கால்களுக்குச் செல்லும் ஊட்டச்சத்து குறைந்து, முடி வளர்ச்சி பாதிக்கப்படும். பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். எனவே தலையில் எண்ணெய் தேய்ப்பது நல்லது. தினமும் எண்ணெய் தேய்ப்பதினால் நிறைய நன்மைகள் இருக்கின்றன.
காய்ந்து போன, கரடுமுரடான, சரிவர பராமரிக்காமல் பாதிக்கப்பட்ட, அடைபட்ட மயிர்க்கால்களின் நுண்துளைகள், எரிச்சலூட்டும் தலைப்பொடுகு உள்ள தலைமுடி மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சினைகள் தீர வாரத்துக்கு இருமுறை தலையில் எண்ணெய் தேய்ப்பது நல்ல பலன்களைத் தரும்.
ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் எண்ணெய் தேய்ப்பது என்பது உலர்ந்த காய்ந்துபோன தலைமுடிக்கு மிகவும் நல்லது. தலையில் ஏற்படும் சில சரும நோய்களுக்கு தினமும் மருந்து கலந்த எண்ணெய் தேய்ப்பது நல்லது என்று சருமநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரை செய்வதுண்டு.
தலையிலுள்ள மயிர்க்கால்கள் பாதிக்கப்படாமல் இருக்க எண்ணெய் மிகவும் உதவியாய் இருக்கும். தலையில் எண்ணெய் தினமும் தேய்ப்பதால் தலைமுடிக்கு மட்டுமல்ல, உடம்பையே புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். தலைமுடி அடர்த்தியாகவும் கருகருவென்றும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய் மிகமிக உதவியாய் இருக்கும்.
தலைக்கும் தலையிலுள்ள மயிர்க்கால்களுக்கும் தேவைப்படும் சத்துப்பொருட்களுக்கும் வைட்டமின்களுக்கும், மயிர்க்கால்கள் உறுதியாக இருக்கவும் தலைமுடி நன்கு வளரவும் எண்ணெய் மிகவும் உதவுகிறது. தலைமுடியில் இருக்கும் சுருள்முடிகளை நேராக்க எண்ணெய் உதவுகிறது. தலையில் பொடுகு வராமல் தடுக்க, இளநரை வராமலிருக்க, மன அழுத்தத்தைப் போக்க, பேன் தொந்தரவு இல்லாமலிருக்க, தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய் மிகவும் உதவுகிறது.
தினமும் தலைமுடியில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்தாலும் பிரச்சினைகள் ஏற்படும். அதிக எண்ணெய் மயிர்க்கால்களை அடைத்துவிடும். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்படும். அதிக எண்ணெய் தலையில் இருக்கும்போது தூசியும், அழுக்கும் அதிகமாக தலையில் சேரும். இதனால் தலையில் அரிப்பு ஏற்படும். சிலசமயம் அதிக எண்ணெய் தலைமுடியில் பொடுகை அதிகமாக்கி விட்டுவிடும்.
தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யில் முதலிடத்தில் இருப்பது அன்றும் சரி, இன்றும் சரி மரச்செக்கு தேங்காய் எண்ணெய்தான். சிறிதளவே எண்ணெய் எடுத்துக்கொண்டு நன்றாக தலை முழுவதும் படும்படி தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவேண்டும். மணிக்கணக்கில் தலையில் எண்ணெய்யை ஊற விடாமல், சிறிது நேரத்தில் எண்ணெய் பிசுக்கு நன்கு போகுமாறு குளிப்பது நல்லது.
அதேசமயம் தலையில் மேலோட்டமாக எண்ணெய் தேய்ப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை. தலைமுடியின் அடியில் படும்படி நன்கு தேய்க்க வேண்டும். அதன்பின் குளிக்க வேண்டும்.
-டாக்டர் எஸ்.அமுதக்குமார்






