சளி, வறட்டு இருமலால் அவதியா..? நிவாரணம் அளிக்கும் அதிமதுர மிளகுப்பால்

உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்கள் அதிமதுர மிளகுப்பால் அருந்தினால் உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
நம் உடலில் நோய் வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அதனை அதிகரிக்க அதிமதுர மிளகுப்பால் பருகலாம். இந்த பாலை தயாரிக்க அதிமதுரம் தூள் கால் டீஸ்பூன், இலவங்கம் ஒரு துண்டு, மஞ்சள் தூள் இரண்டு டீஸ்பூன், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தால் போதும். காரத்தன்மை சற்று அதிகமாக இருந்தால் அவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
வறட்டு இருமல், சளி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இதை காலை உணவுக்கு பிறகும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்களுக்கு உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் வைரஸ் தொற்று, காய்ச்சலை தவிர்க்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இந்த அதிமதுர மிளகுப்பால் பெரிதும் உதவும்.






