தாங்க முடியாத ஒற்றைத் தலைவலியா..? ஏதோ ஒரு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்


தாங்க முடியாத ஒற்றைத் தலைவலியா..? ஏதோ ஒரு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்
x

சாதாரண பிரச்சினையாக இருந்தாலும், மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதை முதலில் தலைவலி மூலமாகத்தான் காட்டும்.

ஒற்றைத் தலைவலி, ஒத்தத் தலைவலி , ஒத்தைத் தலைவலி என்று பரவலாக அழைக்கப்படும் ஒரு பக்க தலைவலி உலகெங்கும் பல கோடி மக்களைப் பாதிப்பில் உள்ளாக்குகிறது. தலையின் ஒரு பக்கத்தில் தான் இது அதிகமானோருக்கு வரும். சில நேரங்களில் சில பேருக்கு இரண்டு பக்கமும் வலி வருவதுண்டு. சாதாரணமாக வந்து சாதாரணமாக போய்விடும் இந்த ஒற்றைத் தலைவலி, சில சமயங்களில் சுத்தியலால் அடித்தால் ஏற்படுவது போன்ற மிகக் கடுமையான வலியை உண்டுபண்ணி, ஆளையே பிழிந்து எடுத்துவிடும்.

தலைவலிக்கான காரணங்கள்

உடலில் நீர்ச்சத்து குறைவு, அதிக மன அழுத்தம், அதிக தூர பயணம், போதுமான தூக்கமின்மை, சைனஸ் அடைசல் பாதிப்பு, மூளையில் நோய், மூளையில் கட்டி, அதிர்ச்சியான விஷயங்கள், அதிக களைப்பு, அதிக கோபம், மலச்சிக்கல் பிரச்னை, அஜீரணம், கழுத்து எலும்பு பிரச்னை, மூளைப் புற்றுநோய், பெண்களுக்கு மாதவிடாய் சரியாக ஒழுங்காக வராமலிருத்தல், மாதவிடாய் சுத்தமாக நின்று விடுதல், தலையில் காயம் ஏற்படுதல், மது அருந்துதல், வேளைக்கு சரியாக சாப்பிடாமல் விட்டுவிடுதல், பதப்படுத்தப்பட்ட மற்றும் கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுதல் , ஜலதோஷம் , அலர்ஜி, சில மருந்துகளின் பக்க விளைவுகள் , ரத்தசோகை, மூளைக் காய்ச்சல் , பிடிக்காத சென்ட் வாசனை, பெயின்ட் வாசனை, அதிக வெளிச்சத்தில் நீண்ட நேரம் நிற்பது அதிக சத்தத்தைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது, அதிக நேரம் செல்போன் பேசுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒற்றைத் தலைவலி வரக்கூடும்.

தனக்குப் பிடிக்காத நபர்களை பார்த்தால்கூட தலைவலி வந்துவிடும் என்று சிலர் கேலியாக சொல்வதுண்டு. உடலில் எந்த ஒரு பிரச்சினை, அது சாதாரண பிரச்சினையாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதை முதலில் தலைவலி மூலமாகத்தான் காட்டும்.

அலட்சியம் வேண்டாம்

ஒற்றைத் தலைவலி மிகச் சாதாரணமாக எப்போதாவது வந்து போய்க் கொண்டிருந்தால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், அதே சமயம் வலி மிகவும் கடுமையானதாக இருந்தாலோ, ஆரம்பித்த தலைவலி விடவே இல்லை என்றாலோ, அதற்கு வேறு ஏதாவது தீவிரமான காரணங்கள் இருக்கலாம். எனவே, தலைவலி தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.

ஒற்றைத் தலைவலி அடிக்கடி வராமலிருக்க, தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். பதற்றம் வேண்டாம். கோபம் வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று விட்டுவிட வேண்டும். அதிக சத்தமுள்ள இடத்திலிருந்து தள்ளி வந்துவிட வேண்டும். அதிக வெளிச்சம் கண்ணில் பட்டு, கூசுகிற அளவுக்கு இருந்தால், அந்த ஒளியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்.

சிகிச்சை

வாழ்நாளில் இதுமாதிரி ஒரு ஒற்றைத் தலைவலியை அனுபவித்ததில்லை என்று உணர்ந்தால், வலியின் கடுமை மிக அதிகமாக இருந்தால், வலி தூக்கத்தைத் தொந்தரவு பண்ணி எழுப்பிவிட்டால், அதிக குழப்பத்தினால் வலி வந்தால், அதிக காய்ச்சலோடு வலி வந்தால், கண் பார்வைக் கோளாறுடன் வலி வந்தால், கண் சிவந்து போய் கண் வலியோடு தலைவலி வந்தால், நினைவு இழந்து வலி வந்தால், உடனடியாக டாக்டரைச் சந்தித்து உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதுதான் மிகமிகச் சிறந்தது.

தலைவலி தானே என்று முடிவு செய்து தாங்களாகவே மருந்து, மாத்திரை சாப்பிடுவது, கை வைத்தியம் பார்ப்பது என வீட்டிலேயே இருக்கவேண்டாம். ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நோய்க்கான அறிகுறிதான். ஒற்றைத் தலைவலிக்கான காரணம் என்ன என்பதை சரியாகக் கண்டுபிடித்து, அதற்கு சிகிச்சை செய்தால், ஒற்றைத் தலைவலி காணாமல் போய்விடும்.

1 More update

Next Story