சேவூர் ஸ்ரீவாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: 29-ந்தேதி விழா ஆரம்பம்

டிசம்பர் 29-ந் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை தினசரி காலையில் நடராஜருக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
கொங்கு ஏழு ஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றக்கூடியதுமான சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 29-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு, கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்கி 8 நாட்கள் நடைபெற உள்ளது.
29-ந் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை தினசரி காலை 10 மணிக்கு நடராஜருக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஜனவரி 3 -ம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடராஜ பெருமான் உடனமர் சிவகாமியம்பாளுக்கு பல்வேறு திரவிய சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து காலை 9 மணிக்கு சிவபெருமானுக்கு உரிய ராக தாளங்கள் வாசிக்கப்பட்டு மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
முற்பகல் 11 மணிக்கு, நடராஜ பெருமான் உடனமர் சிவகாமியம்பாள் புஷ்ப அலங்காரத்தில், முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெறும்.
திருவிழாவை முன்னிட்டு 3 -ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறும். இதைத்தொடர்ந்து ஜனவரி 5 -ம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீர் விழா, கொடி இறக்குதல் நிகழ்வுடன் ஆருத்ர தரிசன விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர், அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






