கர்நாடகாவில் வெளியாகாத 'தக் லைப்' படம்.. ரூ.30 கோடி நஷ்டம் தயாரிப்பு நிறுவனம் வேதனை

தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகாததால் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' படம் கடந்த 5-ந் தேதி கர்நாடகம் தவிர்த்து உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் (மே) 24-ந் தேதி சென்னையில் நடந்திருந்தது. அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து தமிழிலில் இருந்து தான் உங்களது மொழி (கன்னட மொழி) பிறந்தது என்று கூறினார்.
தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்ததாக கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல்ஹாசனுக்கு எதிராகவும், அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைப்' படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கன்னட திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.
ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டதால், கர்நாடகத்தில் கடந்த 5-ந்தேதி தக் லைப் படம் வெளியாகவில்லை. இதனை எதிர்த்து கர்நாடகத்தை சேர்ந்த மகேஸ்ரெட்டி என்பவர் சுப்ரீம் கோா்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்தில் தக்லைப் படத்தை திரையிட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் படம் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையில் தக் லைப் படத்தின் கர்நாடகா வெளியீட்டு உரிமை பெற்ற விநியோகஸ்தர் வெங்கடேஷ் கமலகர் 'தக் லைப்' திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்படாது என்று கூறியுள்ளார். அதாவது, "நாளை 3 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் போதிய திரையரங்குகள் இல்லை; இன்னும் 2 வாரங்களில் ஓடிடியில் தக் லைப் வெளியாகிவிடும் என்பதால் கர்நாடகாவில் திரையிட முடியாது" என்று தெரிவித்துள்ளார். இதனால் தக் லைப் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகா ஐகோரட்டில் தெரிவித்துள்ளது.