வீட்டு வாடகையை தராமல் மிரட்டுகிறார்.. சினிமா உதவி இயக்குனர் மீது எஸ்.பி.பி. சரண் புகார்

பிரபல பாடகர் எஸ்.பி.பி. சரண் சென்னை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை,
மறைந்த திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகனும், பிரபல பாடகருமான சரண், நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர், சென்னை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- சாலிகிராமம் சத்யா கார்டன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் எங்களது குடும்பத்துக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை சினிமா உதவி இயக்குனர் திருஞானத்துக்கு ரூ.40 ஆயிரத்து 500-க்கு மாத வாடகைக்கு விட்டிருந்தேன். மேலும் அவரிடம் முன் பணமாக ரூ.1½ லட்சம் பணம் பெற்றிருந்தேன்.
ஆனால் திருஞானம் கடந்த 25 மாதங்களாக எனக்கு வாடகை பணம் தரவில்லை. இதுதொடர்பாக அவரிடம் சமீபத்தில் கேட்டேன். அதற்கு அவர், என்னை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தையும், எனது வீட்டையும் மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த புகார் மனு அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.