ஏவிஎம் சரவணன் மறைவுக்கு பவன் கல்யாண் இரங்கல்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய திரையுலகில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம். இதனை தொடங்கிய ஏ.வி. மெய்யப்பன் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். இவரது மகனான ஏவிஎம் சரவணன் தந்தைபோலவே முக்கிய திரைப்படங்களை தயாரித்துள்ளார். 1958ஆம் ஆண்டு முதல் ஏவிஎம்மிற்கு தலைமையேற்று திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஏவிஎம் சரவணன், ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், சமீப காலமாக வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 4 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும், ஆந்திர துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏ.வி.எம். சரவணன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்! புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தியத் திரைப்படத் துறையில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஏ.வி.எம். நிறுவனத்தை சரவணன் திறமையாக நடத்தினார். அவர் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து முழு குடும்பத்தினரும் பார்க்கக்கூடிய படங்களைத் தயாரித்தார். சிரஞ்சீவியுடன் தயாரிக்கப்பட்ட "புன்னமி நாகு" திரைப்படம், தலைமுறை இடைவெளியைப் பொருட்படுத்தாமல் இன்றும் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. 'சம்சாரம் ஓக சதுரங்கம்', 'ஆ ஒகடி அடக்கு', 'லீடர்','மெருபு கலலு', சிவாஜி போன்ற படங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






