எப்போதுமே அவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்: சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனிடம் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
சென்னை,
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் ‘மதராஸி’. இந்த படத்தில் ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் வித்யுத் ஜம்வால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ராந்த், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தினை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் சிவகார்த்திகேயன், ருக்மணி, அனிருத் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். படம் முடிந்து வெளியே வந்த சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார்.
அதாவது, “மக்களோடு படத்தைப் பார்த்தேன். அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது. மக்கள் எந்தக் காட்சியை எல்லாம் ரசிக்கிறார்கள் என்பதை பார்க்கவே நானும், அனிருத்தும் திரையரங்கிற்கு வந்து பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்த அனைத்து காட்சியிலும் மக்கள் கைதட்டி ரசித்தார்கள். எனக்கொரு ஆக்ஷன் படமாக இது இருக்கும் என்று தான் நடித்தேன்” என்றார். பின்பு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்த கேள்வி சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது, அதற்கு “எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மட்டுமே” என்று அவர் பதிலளித்தார்.