ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டு அவர்தான் - நடிகர் ரஜினிகாந்த்

ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சென்னை,
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. சிறிது காலமாக உடல்நல பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.
ஏவிஎம் சரவணனின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை அவர் தயாரித்துள்ளார்.
அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து நடிகர் நடிகர் ரஜினிகாந்த் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது, "மிகப்பெரிய மனிதர், ஜென்டில் மேன் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்தான். இவர் எப்போதும் வெள்ளை துணி உடுத்துவது போல, இவர் உள்ளமும் வெள்ளைதான். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர். நான் ஏவிஎம் ஸ்டுடியோவில் 9 படங்களை செய்துள்ளேன். அந்த 9 படங்களும் பெரிய ஹிட். அதற்கு மெயின் காரணம் சரவணன் சார் தான் என்று சொன்னால் மிகையாகாது. அவருடைய மறைவு என் மனசை ரொம்ப பாதிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.






