சினிமாவில் 35 ஆண்டுகள் நிறைவு செய்த “டாப் ஸ்டார்” பிரசாந்த்

தனது 17 வயதில், 1990ம் ஆண்டு இதே நாளில் ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் நடிகர் பிரசாந்த் அறிமுகமானார்.
‘ஆணழகன்’ என்ற தலைப்புக்கு உண்மையிலேயே பொருத்தமானவர் நடிகர் பிரசாந்த்.1990-களில் தமிழ் திரையுலகில் ஆணழகன், காதல் இளவரசன் என்று கொண்டாடப்பட்டவர்தான் நடிகர் பிரசாந்த். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் இவர்தான் வலம் வருவார் என்று எழுத்தாளர் சுஜாதாவால் பாராட்டப்பட்ட ஒரே நடிகரும் இவர்தான். காரணம், கமல்ஹாசனை போன்று புதிய விஷயங்களை ஆர்வமாய் கற்றுக்கொள்ளக்கூடிய நடிகராக இவர் இருந்ததால்தான். அந்த அளவுக்கு சிறு வயதில் இருந்தே தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மிக்க நடிகரான இவர் அரும்பு மீசையுடன் தன் திரைப்பயணத்தை தொடங்கி பிறகு சாக்லேட் பாயாக வலம் வந்து பல லட்சக்கணக்கான பெண் ரசிகைகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டு இன்றுவரை டாப் ஸ்டாராகவே இருந்து வருகிறார்.
செம்பருத்தி, திருடா திருடா, கல்லூரி வாசல், ஜீன்ஸ், ஜோடி, அப்பு, பிரியாத வரம் வேண்டும், பைவ் ஸ்டார், வின்னர், ஷாக், லண்டன், மம்பட்டியான், சாகசம், அந்தகன் முதலிய படங்களில் நடித்துள்ளார். நடிகர்-இயக்குநர் தியாகராஜனின் மகனான பிரசாந்த் ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
‘ஜீன்ஸ்’ படத்தின் மூலம் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையும் அவருக்குக் கிட்டியது. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘வின்னர்’ படத்தின் பிரசாந்துக்கு இன்னொரு ஆல் சென்டர் வெற்றியாக அமைந்தது.
திரை வாழ்க்கையில் எப்போதும் வெற்றிகளை மட்டுமே அதிகமாக சுவைத்தவர். தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும் சில எதிர்பாராத சறுக்கல்களை சந்தித்தார். இப்படி ஏற்றம், இறக்கம் என்று எல்லாவற்றையும் கடந்து இன்றும் வெற்றிகரமான ஹீரோவாக திரையில் பயணித்துக் கொண்டிருக்கும் பிரசாந்த், கடந்த ஏப்ரலில் தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
சில காரணங்களால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த அவர், தற்போது ‘அந்தகன்’ படம் மூலம் கம்பேக் கொடுத்து, விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான‘கோட்’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த வரிசையில், பிரசாந்தின் அடுத்து தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘கோர்ட்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நாயகனாக நடிக்கவுள்ளார்.
தனது 17 வயதில், 1990ம் ஆண்டு இதே நாளில் ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் அறிமுகமான நடிகர் பிரசாந்த் சினிமாவில் 35 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.






