குமரி மாவட்ட கோவில்களில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
நிறை புத்தரிசி பூஜையின்போது வழங்கப்பட்ட நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்கவிட்டனர்.;
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, நவராத்திரி திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருக்கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி, மார்கழி ஊஞ்சல் உற்சவம், சித்திரை விசு கனி காணுதல் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் வழிபாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடைபெறும்.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆடிமாத நிறை புத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியர் அரண்மனை சார்பில் நிச்சயிக்கப்படும் தேதியில் நடைபெறும்.
நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி நிறை புத்தரிசி பூஜை இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடந்தது.
இதையொட்டிஅதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
அதன்பிறகு மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்தினர். சிறப்பு பூஜை முடிந்த பிறகுநெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. பின்னர் அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நெற்கதிர்களை குமரி மாவட்டதிருக்கோவில்களின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விட்டனர். இவ்வாறு நெற்கதிர்களை கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். மேலும் இந்த நெற்கதிர் மணிகளை வயலில் தூவினால் அந்த போகம் சாகுபடி செழித்தோங்கும். நிறை புத்தரிசி பூஜை வழிபாட்டுடன் கோவிலில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்றவை நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவை நடக்கிறது.
நிறை புத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம் தங்கக்கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல் ஆடி நிறைப் புத்தரிசி பூஜைக்காக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 5 மணிக்கு உஷபூஜை, 6 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சகால பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் தீபாராதனையும், இரவில் சிறப்பு பூஜையும் நடக்கிறது
இதே போல சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் வெள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் உள்பட பல கோவில்களில் ஆடி நிறை புத்தரிசி பூஜை இன்று காலை நடந்தது. பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி உத்தரவின் பேரில் அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.