வளர்பிறை சஷ்டி: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
முருகன் கோவில்களில் நடைபெற்ற சஷ்டி பூஜையில் அந்தந்த பகுதி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.;
கிருத்திகை, சஷ்டி போன்ற முக்கிய விசேஷ நாட்களில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அவ்வகையில் இன்று ஆடி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில், மார்க்கெட் பகுதி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கூடலூர் அருகே ஓவேலி சந்தன மலை முருகனுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. கூடலூர், நந்தட்டி, பந்தலூர், மசினகுடி பகுதியில் உள்ள முருகன் கோவில்களிலும் சஷ்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் பழமையான பச்சைமலை பால தண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், பிலிக்கல்பாளையம், கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனி ஆண்டவர், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில், கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில்,
நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜாசுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பொத்தனூர் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகன் என பல்வேறு கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.